Friday, December 7, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VII


கடவுளை நாம் நேசிக்கிறோமா?
நாத்திகம் என்பது சாத்தானின் ஒரு வேலையாக இருக்குமோ? என்ற கண்ணோட்டத்தோடு தான் நான் இந்த வலைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் கடந்த சில நாட்களில் நான் கற்ற மற்றும் பெற்ற சில அனுபவங்களை வைத்து பார்க்கும் போது எந்தவித சந்தேகமும் இல்லாமல் அது சாத்தானின் வேலை தான் என்பது நிரூபணமாகிறது. ஆம், நான் கடந்த வாரத்தில் தான் “கெவின் ஹாவிந்த்” எனப்படும் ஒரு அமெரிக்க முனைவர் பட்டம் பெற்ற, கடவுள் தான் உலகைப் படைத்தார், என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கத் துடித்த ஒரு மனிதரைப் பற்றி இணையதளம் வாயிலாக அறிந்தேன். அவர் நாத்திகவாதிகளான இரண்டு பேராசிரியர்களுடன் நடத்திய விவாதம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாகவும், ஆழமான கருத்துடையதாகவும் கருதப்படுகின்றது. அவர்கள் இருவரும், நீங்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்று கூறுகிறீர்கள், ஆனால் அந்த கடவுளை யார் படைத்தார் என்பதைக் கூறவில்லையே என்ற கேள்வியை எழுப்பிய போது அவர் அதற்கு அறிவியல் அடிப்படையிலேயே, அதுவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்னும் இயற்பியலாளரின் கோட்பாட்டோடு தொடர்புப் படுத்தி பதில் அளித்திருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஒவவொரு காணொளிகளாக உலாவிப் பார்க்கத் தொடங்கினேன். அவரின் காணொளிகள் அனைத்துமே அறிவியலுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வந்தன. 2005 வரையிலான காணொளிகளை மட்டுமே என்னால் காண முடிந்தது. அதன் பிறகு ஒரு மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டிலிருந்து இருந்த காணொளிகளை காண முடிந்தது. இடைப் பட்ட நாட்களில் அவர் ஒன்றுமே செய்யவில்லையா என்று ஆராய்ந்தப் பொழுது தான், அவர் செய்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த அமெரிக்க அரசாங்கம் மற்றும் பல அறிவியலை சார்ந்து வாழ்ந்து வந்த நிறுவனங்கள் அனைத்துமே அவர் மீது பொய்யான வழக்குளைப் போட்டு அவரை சிறைச் சாலையிலேத் தள்ளியிருந்ததுத் தெரிய வந்தது. அவரைச் சிறைப் பிடிக்கச் சென்ற போது போலீசார் மிகவும் மோசமாக அவரிடமும் அவர் மனைவியிடமும் நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் மனைவி விவாகரத்து வாங்கி அவரைப் பிரிந்துச் சென்றிருக்கிறார். அவரது சொத்துக்கள் அனைத்துமே முடக்கப்பட்டிருந்தன. 10 வருட சிறை வாசத்திற்குப் பிறகு அவர் 2015 ஆம் ஆண்டு இறுதியில் தான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். மீண்டும் அவர் தன் ஊழியத்தை செய்து வருகிறார். இவ்வளவு அடிகள் வாங்கியும் அவர் சளைக்கவில்லை. மீண்டும் தேவப் பணியைத் தொடர்கிறார்.
Dr. Kevin Hovind
அவர் மீது வீண் பழி சுமத்திய நாத்திக வாதிகளின் அச்செயல் சாத்தானின் செயலாகத்தான் இருக்க வேண்டும். நிரந்தரமாக அவரை அழிக்க நினைத்த சாத்தானின் சூழ்ச்சியை கடவுள் முறியடித்து அவர் பணியை மீண்டும் தொடர உதவி செய்தார்.  

நாத்திகத்தை நான் கிறிஸ்தவர்களின் இன்னொரு செயல் வழியாகவும் காண்கிறேன். இன்று என் அலுவலகத்தில் என்னுடம் பணிபுரியும் ஒரு கிறிஸ்தவ நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது தான் எனக்குத் தெரிந்தது நாத்திகம் இன்னொரு வாயிலாகவும் இந்த சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கின்றது என்பது. ஆம், அவர்கள் அறியாமையால் மக்கள் பாகால் மற்றும் மாற்று தெய்வங்களை வணங்குவதைப் பொருட்படுத்த விரும்பவில்லை. அப்படி வணங்குவது அவரவர் விருப்பம் எனவும், அவர்களைத் திருத்துவதால் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது எனவும் வினவினார். இந்தக் கேள்வியை ஒரு நாத்திக வாதியின் கேள்வியாகவே நான் பாவிக்கிறேன். நம்மை நேசித்து நமக்காக உயிரைக் கொடுத்த இயேசு நாதர் இவ்வாறு நினைத்திருந்தால் நம் நிலைமை என்னவாக இருந்திருக்குமோ? அது மட்டுமில்லாமல் நம்மைப் போல் பிறனையும் நேசிக்க அவர் கூறியதன் பொருள், சுவிஷேத்தை அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் பிரசிங்கப்பது மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும்.

நான் சிறிதும் எதிர் பாராதது கிறிஸ்தவர்களின் இந்த மனநிலை தான். நடைமுறையில் இவற்றைக் கொண்டு வருவது சற்றுக் கடினம் தான். ஆனால் முடியாத காரியம் அல்ல. நம்மை அளவு கடந்து நேசிக்கும் நம்முடைய தெய்வம் இயேசு கிறிஸ்துவை நாமும் நேசிக்கிறோம் என்றால் இது சாத்தியமே!. நான் முதலில் இந்த வலைப்பதிவை எழுதுவது உபயோகமாக இருக்குமா என்ற ஒரு ஐய்யத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனால், இன்றோ பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல என்னால் முடிந்த வரை என் வாசகர்களுக்கும் கடவுளின் அன்பைப் பற்றி கூறக் கடவுள் தந்த கிருபையை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன். மீண்டும் தொடர்வேன்.
                                    வாழ்க இயேசு நாமம்!!      

Tuesday, November 27, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VI


யார் பொய் சொல்லுவார்?
நான் கடந்த கட்டுரையில் விவரித்து இருந்தது போல, நிறைய அறிவியல் கோட்பாடுகள் சந்தேகத்தை அளிப்பதாகவே இருந்தது. இந்த தாக்கத்தால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் மிகவும் நேசித்த அறிவியல். ஆம், வளர்ச்சிகள் இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் எட்டா கனிகள் என்பது நம்மில் பலரும் அறிந்ததே! உதாரணமாக இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்! என்கிற மறுக்க முடியாத உண்மையை நாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் எனக்குள் சிறு வயதில் எங்கோ ஒரு கிறிஸ்தவ மாநாட்டு உரையில் நான் கேட்ட ஒரு வசனம் என் மனதைத் திரும்பத் திரும்ப துளைத்துக் கொண்டிருந்தது. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல” என்னும் இந்த வசனம் தான் அது. இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. திரும்ப திரும்ப என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த வசனத்தின் அர்த்தத்தைப் பல விதங்களில் மாற்றி அறிய முற்பட்டேன். அனைத்தும் ஒரே அர்த்தத்தை தான் தந்தது. எனக்கு கனவில் வந்த அந்த சம்பவமும் இந்த வசனத்திற்கும் இருந்த தொடர்பை ஆராயத் தொடங்கினேன். ஒரு மனிதனாக நான் பொய் கூறாமல் வாழ்வது மிகவும் கடினம். நாம் நம்மை அதிகம் நேசிப்பவர்களிடமே பொய் அதிகமாகக் கூறுகிறோம் என்றால், ஏன் மற்றவர்களிடம் நாம் பொய் கூறாதிருக்கப் போகிறோம்? என்ற சிந்தை எழுந்தது. மனிதன் கூறும் பல விஷயங்கள் பொய்யாக இருப்பதை உணர்ந்தேன். என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது. அந்த பதில் தான் இயேசு கிறிஸ்து. கடவுள் நம்மிடம் உண்மையை மறைப்பதில்லையே! என்னில் சிறிது சிறிதாக நம்பிக்கைத் துளிர் விடத் துவங்கியது. கோடான கோடி மக்களின் நம்பிக்கை எப்படி பொய்யாய் போக முடியும் என்று எண்ணினேன். அந்தக் கணத்தில் நான் மீண்டும் பிறந்தது போன்ற ஒரு உணர்வு. ஆனால் அப்போதும் கூட எனக்கு ஜெபம் செய்வதில் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. சிறிது சிறிதாக வேத வசனங்களை தியானிக்கக் கற்கத் தொடங்கினேன். கர்த்தர் என் வாழ்வை மாற்றத் தொடங்கினார்.

இன்று இந்த நாத்திகம் என்னும் படு குழியினுள் விழுந்துத் தவிக்கும் இளைஞர்களை எப்படியாவது மீட்க வேண்டும். அதற்கும் கடவுளின் அனுகிரகம் நமக்குத் தேவைப்படுகிறது. அவர் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். மனிதனுடைய பலவீனமே இன்று அவனைத் தன்னைத் தான் தொலைத்துக் கொள்ளும் வழியைத் தெரிந்துக் கொள்ள வழி வகை செய்தது. அனைவரும் படித்து விட்டோம், நாம் செய்வது தான் சரி என்ற ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றனர். இவற்றை நான் பல இளைஞர்களிடம் காண்கிறேன். இதற்குப் பெற்றோரும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்து விடுகின்றனர். பெற்றோர் தன் குழந்தை கோவிலுக்குச் செல்லுகிறதா என்று மட்டுமே கவனிக்கின்றனர். நான் அறிந்த ஒரு சிலரோ அதைக் கூட கண்டு கொள்வதில்லை. அவர்கள் தங்கள் குழந்தை ஒரு நாத்திகவாதி என்று அவ்வளவு மமதையாக அனைவரிடமும் கூறுகின்றனர். 

இவற்றிற்கு காரணம் என்ன? ஏன் பெற்றோருக்குள்ளும் இப்படி ஒரு மாறுதல் நிகழ்கிறது? இந்த கேள்வியும் என்னுள் எழுந்தது. பல விடைகளும் கிடைத்தன. அவற்றை நான் என் அடுத்தக் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன். 
                                    வாழ்க இயேசு நாமம்.


Monday, November 19, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part V

செயற்கைக் கோள்கள் உண்மையாகவே உள்ளனவா?
அறிவியலில் காணப்படும் பிழைகளை ஒன்றொன்றாக நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்தக் காலத்தில் எனக்கு இரண்டாவதாககச் சந்தேகம் எழுந்தது, தகவல் தொழில் நுட்பப் பிரிவில் தான். ஆம், நான் தகவல் தொழில் நுட்பம் கற்றவன் அல்ல. ஆனால் எனக்கு செயற்கைக் கோள்கள் நிஜமாகவே இருக்கின்றனவா? என்ற சந்தேகம் எழுந்தது. நான் ஒரு நாள் எதேச்சையாக வலைதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது நான் கண்ட ஒரு விஷயம் என்னை பிரம்மிக்க வைத்தது. செயற்கைக் கோள்களைப் பற்றிய என் சந்தேகம் எனக்கு மட்டும் எழவில்லை, உலகில் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த வெவ்வேறு மனிதர்களுக்கும் எழுந்துள்ளது என்பது தான். பல பேர் யூ டியூப் என்னும் தொலைக்காட்சி வலைத்தளத்தில் காணொளிகள் மூலம் தங்கள் கருத்துக்களைக் கூறியிருந்தனர். அவர்கள் அறிவியல் அடிப்படையில் மிகத் தெளிவான விளக்கங்களை அளிக்கவில்லை. நான் அதற்கு அறிவியல் அடிப்படையிலான ஒரு விளக்கத்தைப் பெற முயன்றேன்.

வளிமண்டலத்தின் 5 அடுக்குகள் பற்றி நம்மில் பலரும் அறிந்ததே! அதில் மிகவும் வெப்பம் நிறைந்தப் பகுதி “வெப்பஅடுக்கு” இதை ஆங்கிலத்தில் “thermo sphere” என்று அழைப்பர். அந்த அடுக்கில் தான் செயற்கைக் கோள்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுவர். அது புவியிலிருந்து சுமார் 690 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளப் பகுதியாகும். அதற்கு வெப்ப அடுக்கு என்ற பெயர் வைத்தக் காரணமே சூரியனின் அதிகபட்ச வெப்ப நிலையை அந்த அடுக்கில் உள்ள எந்த ஒரு பொருளும் முழுவதுமாக கதிர் வீச்சு எனப்படும் வெப்ப பரிமாற்ற முறையில் உட்கிரகித்து விடும் என்பதால் தான். இந்த நிலையில் அங்கு இருக்கும் செயற்கைக் கோள்கள் குறைந்தது 25000 C வெப்ப நிலையையாவது உட்கிரகித்திருக்க வேண்டும். இவ்வளவு அதிகமான வெப்ப நிலையில் செயற்கைக் கோள்களில் உபயோகிக்கக் கூடிய டைட்டானியம் மற்றும் அலுமினியம் கலந்த கலவையினாலான உலோகம் கண்டிப்பாக உருகி விடும் (கலவையின் உருகு நிலை சுமார் 17000 C மட்டுமே). மேலும் பல உலோகக் கலவைகள் இருந்தாலும் கூட வெப்ப அடுக்கில் இருக்கும் அந்த வெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. இங்கு செயற்கைக் கோள்கள் உருகிய நிலையில் தான் காணப்பட வேண்டும். இவற்றை நான் மிக நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டறிந்தேன். பலரிடம் இது பற்றி விவரித்தேன். ஏனெனில் பல மில்லியன் பணம் இவற்றிற்காக செலவிடப் படுகின்றன. இந்த நிலையில் அது உண்மையா? என்ற ஒரு கேள்வி எழும் போது என்னை யோசிக்க வைத்தது. மேலும் இந்தப் புவியில் பசியால் பல கோடி மக்கள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில். அடுத்தக் கிரகத்தில் என்ன இருக்கிறது என்று அறிய முற்படுவது அவசியமான ஒன்றா? என்ற கேள்வி எழுந்தது. நீங்களே சிந்தித்துப் பாருங்கள். என் இந்தத் தேடல் மேலும் பல அதிர்ச்சியான தகவல்களுக்குள் என்னை இழுத்துச் சென்றது. அவற்றை என் பின் வரும் கட்டுரைகளில் விவரிக்கிறேன்.

நம் இளைஞர்கள் மத்தியில் நான் கண்ட மேலும் ஒரு பொல்லாத ஆளுகை போதைப் பழக்கம். என் கல்லூரியில் சென்ற வாரத்தில் ஒரு மாணவன் இந்த போதைப் பழக்கத்தால் இறந்து போனான். மிகவும் வேதனையான உண்மை. போதையில் இருக்கும் போது வாகனம் ஓட்டிக் கட்டுப் பாட்டை இழந்து இறுதியில் உயிரைப் பறிக்கும் ஒரு விபத்தாகப் போய் முடிந்திருந்தது. இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்து இருக்கிறது. இன்றைய மாணவர்கள் தன் போதைப் பழக்கத்தை மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். இதில் பெருமைப் பட என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. போதைப் பழக்கம் ஏதோ ஒரு வகையில் உயிரைப் பறிக்கும் வல்லமை வாய்ந்தது. இவை கடவுளுக்கும் எதிரான ஒரு செயல் ஆகும். இவற்றை மாற்று மார்க்கங்களைப் பின்பற்றும் மற்றும் நாத்திகம் பேசித் திரியும் இளைஞர்களுக்கு நாம் எவ்வாறு புரிய வைப்பது என்றுப் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒரே வழி அவர்களுக்காக ஜெபிப்பது மட்டும் தான். என்னுடைய வேண்டுகோள் ஒன்று உண்டு. நீங்களும் இந்த இளைஞர்களுக்காக ஜெபிப்பீர்களா?

                                    வாழ்க இயேசு நாமம்!!

Tuesday, November 13, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part IV


எனக்குள் எழுந்த கேள்விக்கு பதில் காண முயன்றேன். அநேக சாட்சிகளை கவனித்தேன். அவர்கள் கூறுவது பொய்யாக இருக்குமோ? என்று அவற்றை ஆராய முயன்றேன். இந்த சமயத்தில் தான் நான் மிகவும் மதித்த அறிவியலின் கோணத்தில் என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. என் நண்பனுடனான ஒரு விவாதத்தின் போது என்னிடம் அவன் எழுப்பிய ஒரு கேள்வி ,”கடல் அலைகள் எப்படி உருவாகின்றன?” என்று வினவினான். நான் அதற்கு அவனிடம் வழக்கமான பதிலான “நிலவின் ஈர்ப்பு விசை தான் காரணம் என்று பதில் அளித்தேன். “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான். “அறிவியல் அதைத் தானே கூறுகிறது” என்று பதில் அளித்தேன். அவன் நக்கலாக, “அறிவியல் என்ன கூறினாலும் நம்புவியா?” என்று வினவினான். அவன் நக்கலாகக் கூறி விட்டு சென்று விட்டான் ஆனால் என்னை அந்தக் கேள்வி மிகவும் பாதித்தது. அப்பொழுதிருந்து கடல் அலைகளுக்கான காரணத்தை அறிய சிறு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பல புத்தகங்கள் படித்தேன். அனைத்துமே வெறும் theory எனப்படும் கோட்பாடாகவே இருந்தது.

நிலவின் ஈர்ப்பு விசையினை விட, புவியின் ஈர்ப்பு விசை பத்து மடங்கு அதிகம். இந்த நிலையில் எப்படி புவியில் இருக்கும் ஒரு பொருளை அதை விட பத்து மடங்கு குறைவான ஈர்ப்பு விசையுள்ள நிலவால் இழுக்க முடியும்? என்ற கேள்வி பிறந்தது. இந்த ஆராய்ச்சி என்னை மேலும் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகளுக்குள் இழுத்து சென்றது. “நிலவு இருக்கட்டும், அது எப்படி சூரியனின் ஈர்ப்பு விசையை கண்டறிந்தார்கள்?”  நான் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு அன்று புரிந்த்தது. ஏமாந்துப் போனது போல் ஒரு உணர்வு, நான் இவ்வளவு நாள் கற்றுக் கொண்ட அறிவியலில் இவ்வளவு தர்க்கங்கள். இவற்றைப் பற்றி நான் ஒரு முறை கூட சிந்தித்தது கிடையாதே! இன்னும் தோண்ட ஆரம்பித்தேன். எனக்கு ஏமாற்றங்கள் மட்டுமே பதிலாக கிடைத்துக் கொண்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக என்னுடைய அடுத்தடுத்தக் கட்டுரைகளில் விவரிக்கிறேன்.

ஒரு தெரிந்த நண்பருடைய நண்பர் மிகவும் பக்தி வைராக்கியமான குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய முக நூல் பக்கத்தை ஒரு முறை ஆராய்ந்தப் பொழுது நான் பார்த்த ஒரு விஷயம் என்னை மிகவும் அதிர வைத்தது. அதில் கேட்டிருந்த கேள்வி “இயேசுவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்பதற்கு அவர்கள் “இது ஒரு பெரிய நகைச்சுவை அப்படி ஒருவர் இருந்தாரா என்ன?” என்று பொருள்படும் ஆங்கில வாக்கியத்தில் பதிலை தட்டச்சு செய்து வைத்திருந்தார். ஆம், இன்று இளைஞர்கள் இவ்வாறு தான் இருக்கிறார்கள். விவாதித்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்ட மனிதன் இன்று அலைப் பேசி என்னும் சிறு உலகத்தில் சிக்கிக் கொண்டுள்ளான். அவன் நிலையோ கடவுளையே யாரென்று கேட்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இதற்கு நாம் எவ்வாறு தீர்வு காண போகிறோம் என்று தெரியவில்லை. எனக்கு இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறிய ஒரு வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. ஆம், “நான் ஒரு விஷயத்திற்காக மட்டுமே பயப்படுகிறேன், ஒரு நாள் இந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியானது, நம்மிடையே இருக்கும் விவாதங்களைக் குறைக்கும். அப்போது வருங்கால தலைமுறையே முட்டாள் ஆகி விடும்” என்று 19 – ம் நூற்றாண்டிலேயே கூறி இருந்தார். அது இன்று அரங்கேறி வருவது மிகவும் வேதனையான விஷயம். இந்த நிலை மாறுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க இயேசு நாமம்.

Monday, November 5, 2018

Atheism/ Is it an Objective of Devil?? - Part III

நாத்திகம் பற்றிய என்னுடையத் தேடலின் போது தான் அந்தக் கனவு எனக்கு வந்தது. இது வரை என் வாழ்வில் நான் கண்ட கனவுகளில் எதுவுமே இவ்வளவுத் தெளிவாக இருந்ததில்லை. ஆம், கனவு இரண்டு நிமிட நீளம் கூட இருக்கவில்லை. ஆனால், அது என் வாழ்வின் முக்கியமான மாறுதலாக அமைந்தது. நான் நடப்பதற்குக் கூட இடையூறான முட்கள் நிறைந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தம் “அங்கு செல்லாதே, அது முடிவில்லாதப் பாதை திரும்பி வா” என்று கூறியது. “நான் எப்படிச் சென்றால், உங்களுக்கு என்ன?” என்று திமிருடன் வினவினேன். “உன் மேல் எப்பொழுதும் கரிசனையுடையவன் நான், நான் சொல்வதைக் கேள் திரும்பி வா” என்று பதில் கூறியது அக்குரல். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, “உன் கேள்விகளுக்கு நான் தெளிவான பதில்கள் தருகிறேன், தயவு செய்து திரும்பி வந்து விடு” என்று கெஞ்சலுடம் கூடிய குரலில் கூறியது. நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.  இரவு ஒரு மணிக்கு மேலாயிருந்தது. இப்படி ஒரு கனவை நான் எதிர் பார்த்தது இல்லை.

வழக்கமான கனவுகள் என் அன்றாட வாழ்வு சம்பந்தப் பட்ட இடங்களை அடிப்படையாகக் கொண்டு தான் அமையும். இது அவ்வாறு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் குழப்பத்துடன் எழுந்து விடுதியின் வெளியில் வந்து உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது என் மனதில் திடீரென ஒரு கேள்வி எழுந்தது. “இயேசுவுக்காக அநேக மனிதர்கள் உயிரினை இழந்துள்ளனர். மனிதன் தன் பெற்றோருக்காக, நண்பர்களுக்காக, மனைவிக்காக அல்லது குழந்தைகளுக்காகக் கூட உயிரைக் கொடுக்க விழைவதில்லை. ஆனால் தாங்கள் கண்டும் கூட இராத இந்த இயேசுவுக்காக எப்படிக் கொடுத்தனர்?” என்று. எனக்குள் எழுந்த அந்தக் கேள்வி என் வாழ்வை மாற்றப் போகிறது என்பதை நான் அன்று அறியவில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்று என்னுடைய அடுத்தக் கட்டுரையில் விவரிக்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் நான் கண்ட மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு கடவுளின் அன்பு புரியவில்லை என்பது தான். ஒருவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்துக் கொண்டால் மட்டுமே அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நமது நன்மைக்கென்பது நமக்குப் புரியும். அவர்கள் சத்தியத்தை அறிய முயல்வதில்லை. அது அவர்கள் தவறு அல்ல, சந்தேகத்தின் ஆவி நம்மை ஆட்டி வைத்துள்ளது என்பது தான் உண்மை. நான் இடைவிடாது ஜெபிப்பது ஒரு விஷயத்தை நோக்கி தான், “தேவனே என்னில் இருக்கும் பெருமையை சிதைத்து உம் அன்பை உணரும் படிக்கு என் இதயத்தைத் திறந்தருளும்” என்பதே. ஆம், கடவுள் நம்மிடம் பல விதங்களில் பேசுகிறார். உதாரணமாக சில பாவங்கள் நாம் செய்து முடித்தப் பின்பு, நம் மனது, ஏன் அவ்வாறு செய்தோம்? என்று நம்மை மிகவும் வருந்த வைக்கும். அது கூட கடவுள் நம்மிடம் பேசுவது தான். இல்லை என்றால் வருத்தப் பட வேண்டிய அவசியம் இருக்காதே!! நம்மால் சந்தேகத்தின் ஆவியை வெற்றிக் கொள்ள முடியுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். நன்றி வணக்கம்
வாழ்க இயேசு நாமம்!!

Monday, October 29, 2018

Atheism/ Is it an Objective of Devil?? - Part II


        நாத்திக வாதியாக இருப்பதும் அவ்வளவு சுலபமல்ல. கடவுளே இல்லை என்று கூறுபவர்கள் எந்த வித நியாயத் தீர்ப்புகளுக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே! எனவே அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் அல்லவா? ஆனால் நான் நாத்திகம் பேசிக்கொண்டிருந்த நாட்களில் அவ்வாறு இருந்ததில்லை. எனக்குக் கடவுள் மீது கோபம் இருந்தது. ஆம், ஒரு புறம் அதிகார வர்க்கம் மக்களைச் சுரண்டி அதில் குளிர் காய்ந்துக் கொண்டிருக்க, மறு புறமோ ஏழை மக்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் சிரமப்படுகிறார்களே! இதையெல்லாம் பார்த்தும் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக அமர்ந்திருப்பவர் தான் கடவுளா? என்ற கேள்வி என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்த நாட்கள் அவை. இவை கடவுள் மீது வெறுப்பை உண்டாக்கியது. அவ்வெறுப்பு இறுதியில் கடவுளே இல்லை என்ற மனநிலைக்கு என்னைத் தள்ளியது. நாத்திகம் பேசியதால் நான் ஒன்றும் கெட்டவனாக இருந்து விடவில்லை. எனக்குள் தேடல் தொடங்கியதே, நான் நாத்திகம் பேச ஆரம்பித்த அப்பொழுதிலிருந்து தான். ஏனெனில், தான் நினைப்பதுதான் சரி என்று நினைக்கும் மனநிலை மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே உள்ளதே! அது என்னிடமும் இருந்தது. நான் என் பெற்றோரிடம் நிறைய வாதிட்டிருக்கிறேன். அவர்கள் ஒரு முறை கூட தங்கள் நம்பிக்கையிலிருந்து சிதறியது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் தங்கள் வாழ்க்கையில் பல இடையூறுகளைச் சந்திது, தாங்கள் செய்த அநேக முயற்ச்சிகளில் தோல்விகளை மட்டுமே அடைந்தவர்கள் அவர்கள். எனக்கு அவர்களின் கடவுள் மீதான அந்த நம்பிக்கை ஆச்சரியத்தை அளித்தது.

     ஒரு குழப்பமான மனநிலையோடு தான் நான் முனைவர் பட்டப் படிப்பில் இணைந்தேன். நான் என் முனைவர் பட்டப் படிப்பினை அயல் நாடுகளில் உள்ள பெரிய பல்கலைக் கழகங்களில் ஏதாவது ஒன்றில் பயின்று பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அதற்காக நிறைய முயன்றும் இருக்கிறேன். ஆனால் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பின்பு நான் தமிழ் நாட்டிலேயே பயின்று கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். இது கூட எனக்கு ஒரு ஏமாற்றமாகத் தான் அமைந்தது. ஆம், கடவுள் நிஜமாகவே இருந்திருந்தால் எனக்கு வெளி நாட்டில் இடம் கிடைத்திருக்கும், அங்கு தானே பயின்று இருப்பேன் என்றெல்லாம் எனக்குத் தோன்றியது. இந்தச் சூழ்நிலையிலும் என் தேடலை நான் நிறுத்தி விடவில்லை. அதுவும் முனைவர் பட்டப் படிப்பு ஆரம்பித்தப் பிறகு என் சிந்திக்கும் திறன் அடுத்த நிலைக்குச் சென்றிருந்தது. நான் பெரிதாக யாரிடமும் விவாதங்கள் செய்தது கிடையாது அப்போதெல்லாம். ஏதாவது புத்தகங்களை படித்து அதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயங்களை கூட யாரிடமும் அதிகமாக விவரித்துக் கூறியது கிடையாது. கடவுளுக்கு எதிராக புத்தகங்கள் எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறேன்.


        இந்த நிலையில் தான் 2015 – ம் ஆண்டு மே மாத இறுதியில் (தேதி எனக்குச் சரியாக நியாபகம் இல்லை) ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டிருந்த போது வந்த ஒரு கனவு தான் என் வாழ்க்கையை மாற்றியது. அந்த கனவு என் வாழ்வை மாற்றப் போகிறது என்பதை நான் அப்பொழுது அறியவில்லை. என்னுடைய அந்தக் கனவைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் நான் விவரிக்கிறேன்.


           நாத்திகம் இளைஞர்களை அதிகம் ஆளுகைச் செய்வதற்கான காரணம், அவர்களுக்கு அந்த வழி பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, வாழ்க்கையில் எதையுமே ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், அனைத்தையும் எதேச்சையாக எடுத்துக் கொள்ளும் ஒரு இளைஞனை எடுத்துக் கொண்டால், அவன் நாத்திகம் பேசுவதற்கான காரணம், கடவுளின் வழியைப் பின் பற்றுவதை விட, உலக இன்பங்கள் அவனுக்குப் பெரிதாகத் தோன்றுவதாகத் தான் இருக்கும். அவனைப் பொறுத்த வரை நாத்திகம் பேசுவதன் மூலம் பாவம் மற்றும் பாவத்திற்கான தண்டனை ஆகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூட நினைக்கலாம். அவனுக்கு கடவுளின் வழிகள் பின்பற்றுவதற்கு கடினமானதாகத்தான் தோன்றும். யாருமே கடினமான சூழ்நிலைகளில் வாழ விரும்புவது இல்லையே!! எது நடந்தாலும் அது கடவுள் நமக்குத் தருவது தான் என்று ஏற்றுக் கொள்ளும் மனநிலை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் அடிக்கடி கூறும் ஒரு வாக்கியம் ஒன்று உண்டு, “கடவுளுக்குள்ளான சுதந்திரம் ஒன்று நம் அனைவருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது, அது நாம் நினைப்பதையெல்லாம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது அல்ல, கடவுளின் கட்டளைகளுக்கு உட்பட்டு எதைச் செய்ய வேண்டுமோ அவற்றை மட்டுமே செய்வதற்காகக் கொடுக்கப்பட்டது”. நாம் கடவுளின் வழிகளை அறிய முடியுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம்.

                                                           நன்றி. வாழ்க இயேசு நாமம்.

Tuesday, October 23, 2018

Atheism/ is it an Objective of Devil?? - Part I

நான் ஒரு பாரம் பரியம் மிக்க ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். அனைத்து ஞாயிறுகளிலும் ஆராதனைகள் மற்றும் ஓய்வு நாள் பாட சாலையில் பங்கெடுப்பது என அனைத்து ஆலயம் சார்ந்த பணிகளிலும் அக்கறையோடு கலந்து கொண்டும் வந்தேன். ஆனால் என்னுள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. எதனால் இந்த இயேசு என்ற மனிதர் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப் படுகிறார்? அப்படி என்ன அவர் செய்து விட்டார்?. அவரை சிலுவையில் அறைந்தனர் என்பதும் மற்றும் அவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்பதும் நான் அறிந்த ஒன்றே. இருப்பினும் இவற்றை என் மனம் ஏற்க மறுத்த காலங்கள் உண்டு. நான் அறிவியலில் அதுவும் மீநுண் துகளியல் தொழில்நுட்பப் பிரிவில் (Nanotechnoloy) முனைவர் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். என் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களானது இயற்பியலை அடிப்படையாகக் கொண்டது. 
               
எனவே எனக்கு அறிவியல் மற்றும் அதன் கண்டு பிடிப்புகள் மட்டுமே கடவுளாகப் பட்டன. இது ஒன்றும் புதிதல்ல, இந்த உலகம் ஏற்கனவே நிறைய விஞ்ஞானிகளை நாத்திக வாதிகளாகக் கண்டிருக்கிறது. நானும் அவர்கள் வழியைப் பின்பற்றி கடவுள் இல்லை, பைபிள் புனையப்பட்டப் பல கதைகளின் தொகுப்பு என்றெல்லாம் வாதமிட்டும் இருக்கிறேன். நான் எவ்வாறு கடவுளின் வழியைத் திரும்ப அடைந்தேன் என்பதை என் அடுத்தக் கட்டுரையில் விவரிக்கிறேன்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் நாத்திகம் பேசுதல் என்பது மிகவும் பரந்துக் கிடப்பதுடன் அவர்கள் நாத்திக வாதிகள் என்று அழைக்கப்படுவதில் பெருமிதம் கொள்கின்றனர். நாத்திகம் என்பது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அதிகம் பரவி காணப்படும் ஒரு விஷச்செடி. இந்தியாவிலும் நாத்திக வாதிகள் இருந்திருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. ஏனெனில், இன்று அதிகம் நாத்திகம் பேசுபவர்கள் அதிகம் கிறிஸ்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். என்னை இந்த கட்டுரை எழுதத் தூண்டியதே, என் நண்பன் ஒருவன் கடவுளே இல்லை என்று பேசியது தான். அவனது அந்த பேச்சு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்னும் எத்தனை தமிழ் கிறிஸ்தவர்கள் நாத்திக வாதிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நாத்திக வாதிகள் என்று சொல்லிக் கொள்வதால் தாங்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. இதே மனநிலையில் (நாத்திகம் பேசுதல்) நானும் இருந்திருக்கிறேன். இவற்றிற்கான காரணங்களை நான் ஆராய்ந்து வைத்திருகிறேன். அவற்றை பின் வரும் என் கட்டுரைகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி வணக்கம்.  

Atheism/ Is it an Objective of Devil?? Part XIV

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!                   அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்...