Tuesday, November 27, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VI


யார் பொய் சொல்லுவார்?
நான் கடந்த கட்டுரையில் விவரித்து இருந்தது போல, நிறைய அறிவியல் கோட்பாடுகள் சந்தேகத்தை அளிப்பதாகவே இருந்தது. இந்த தாக்கத்தால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் மிகவும் நேசித்த அறிவியல். ஆம், வளர்ச்சிகள் இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் எட்டா கனிகள் என்பது நம்மில் பலரும் அறிந்ததே! உதாரணமாக இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்! என்கிற மறுக்க முடியாத உண்மையை நாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் எனக்குள் சிறு வயதில் எங்கோ ஒரு கிறிஸ்தவ மாநாட்டு உரையில் நான் கேட்ட ஒரு வசனம் என் மனதைத் திரும்பத் திரும்ப துளைத்துக் கொண்டிருந்தது. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல” என்னும் இந்த வசனம் தான் அது. இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. திரும்ப திரும்ப என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த வசனத்தின் அர்த்தத்தைப் பல விதங்களில் மாற்றி அறிய முற்பட்டேன். அனைத்தும் ஒரே அர்த்தத்தை தான் தந்தது. எனக்கு கனவில் வந்த அந்த சம்பவமும் இந்த வசனத்திற்கும் இருந்த தொடர்பை ஆராயத் தொடங்கினேன். ஒரு மனிதனாக நான் பொய் கூறாமல் வாழ்வது மிகவும் கடினம். நாம் நம்மை அதிகம் நேசிப்பவர்களிடமே பொய் அதிகமாகக் கூறுகிறோம் என்றால், ஏன் மற்றவர்களிடம் நாம் பொய் கூறாதிருக்கப் போகிறோம்? என்ற சிந்தை எழுந்தது. மனிதன் கூறும் பல விஷயங்கள் பொய்யாக இருப்பதை உணர்ந்தேன். என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது. அந்த பதில் தான் இயேசு கிறிஸ்து. கடவுள் நம்மிடம் உண்மையை மறைப்பதில்லையே! என்னில் சிறிது சிறிதாக நம்பிக்கைத் துளிர் விடத் துவங்கியது. கோடான கோடி மக்களின் நம்பிக்கை எப்படி பொய்யாய் போக முடியும் என்று எண்ணினேன். அந்தக் கணத்தில் நான் மீண்டும் பிறந்தது போன்ற ஒரு உணர்வு. ஆனால் அப்போதும் கூட எனக்கு ஜெபம் செய்வதில் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. சிறிது சிறிதாக வேத வசனங்களை தியானிக்கக் கற்கத் தொடங்கினேன். கர்த்தர் என் வாழ்வை மாற்றத் தொடங்கினார்.

இன்று இந்த நாத்திகம் என்னும் படு குழியினுள் விழுந்துத் தவிக்கும் இளைஞர்களை எப்படியாவது மீட்க வேண்டும். அதற்கும் கடவுளின் அனுகிரகம் நமக்குத் தேவைப்படுகிறது. அவர் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். மனிதனுடைய பலவீனமே இன்று அவனைத் தன்னைத் தான் தொலைத்துக் கொள்ளும் வழியைத் தெரிந்துக் கொள்ள வழி வகை செய்தது. அனைவரும் படித்து விட்டோம், நாம் செய்வது தான் சரி என்ற ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றனர். இவற்றை நான் பல இளைஞர்களிடம் காண்கிறேன். இதற்குப் பெற்றோரும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்து விடுகின்றனர். பெற்றோர் தன் குழந்தை கோவிலுக்குச் செல்லுகிறதா என்று மட்டுமே கவனிக்கின்றனர். நான் அறிந்த ஒரு சிலரோ அதைக் கூட கண்டு கொள்வதில்லை. அவர்கள் தங்கள் குழந்தை ஒரு நாத்திகவாதி என்று அவ்வளவு மமதையாக அனைவரிடமும் கூறுகின்றனர். 

இவற்றிற்கு காரணம் என்ன? ஏன் பெற்றோருக்குள்ளும் இப்படி ஒரு மாறுதல் நிகழ்கிறது? இந்த கேள்வியும் என்னுள் எழுந்தது. பல விடைகளும் கிடைத்தன. அவற்றை நான் என் அடுத்தக் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறேன். 
                                    வாழ்க இயேசு நாமம்.


Monday, November 19, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part V

செயற்கைக் கோள்கள் உண்மையாகவே உள்ளனவா?
அறிவியலில் காணப்படும் பிழைகளை ஒன்றொன்றாக நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்தக் காலத்தில் எனக்கு இரண்டாவதாககச் சந்தேகம் எழுந்தது, தகவல் தொழில் நுட்பப் பிரிவில் தான். ஆம், நான் தகவல் தொழில் நுட்பம் கற்றவன் அல்ல. ஆனால் எனக்கு செயற்கைக் கோள்கள் நிஜமாகவே இருக்கின்றனவா? என்ற சந்தேகம் எழுந்தது. நான் ஒரு நாள் எதேச்சையாக வலைதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது நான் கண்ட ஒரு விஷயம் என்னை பிரம்மிக்க வைத்தது. செயற்கைக் கோள்களைப் பற்றிய என் சந்தேகம் எனக்கு மட்டும் எழவில்லை, உலகில் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த வெவ்வேறு மனிதர்களுக்கும் எழுந்துள்ளது என்பது தான். பல பேர் யூ டியூப் என்னும் தொலைக்காட்சி வலைத்தளத்தில் காணொளிகள் மூலம் தங்கள் கருத்துக்களைக் கூறியிருந்தனர். அவர்கள் அறிவியல் அடிப்படையில் மிகத் தெளிவான விளக்கங்களை அளிக்கவில்லை. நான் அதற்கு அறிவியல் அடிப்படையிலான ஒரு விளக்கத்தைப் பெற முயன்றேன்.

வளிமண்டலத்தின் 5 அடுக்குகள் பற்றி நம்மில் பலரும் அறிந்ததே! அதில் மிகவும் வெப்பம் நிறைந்தப் பகுதி “வெப்பஅடுக்கு” இதை ஆங்கிலத்தில் “thermo sphere” என்று அழைப்பர். அந்த அடுக்கில் தான் செயற்கைக் கோள்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுவர். அது புவியிலிருந்து சுமார் 690 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளப் பகுதியாகும். அதற்கு வெப்ப அடுக்கு என்ற பெயர் வைத்தக் காரணமே சூரியனின் அதிகபட்ச வெப்ப நிலையை அந்த அடுக்கில் உள்ள எந்த ஒரு பொருளும் முழுவதுமாக கதிர் வீச்சு எனப்படும் வெப்ப பரிமாற்ற முறையில் உட்கிரகித்து விடும் என்பதால் தான். இந்த நிலையில் அங்கு இருக்கும் செயற்கைக் கோள்கள் குறைந்தது 25000 C வெப்ப நிலையையாவது உட்கிரகித்திருக்க வேண்டும். இவ்வளவு அதிகமான வெப்ப நிலையில் செயற்கைக் கோள்களில் உபயோகிக்கக் கூடிய டைட்டானியம் மற்றும் அலுமினியம் கலந்த கலவையினாலான உலோகம் கண்டிப்பாக உருகி விடும் (கலவையின் உருகு நிலை சுமார் 17000 C மட்டுமே). மேலும் பல உலோகக் கலவைகள் இருந்தாலும் கூட வெப்ப அடுக்கில் இருக்கும் அந்த வெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. இங்கு செயற்கைக் கோள்கள் உருகிய நிலையில் தான் காணப்பட வேண்டும். இவற்றை நான் மிக நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டறிந்தேன். பலரிடம் இது பற்றி விவரித்தேன். ஏனெனில் பல மில்லியன் பணம் இவற்றிற்காக செலவிடப் படுகின்றன. இந்த நிலையில் அது உண்மையா? என்ற ஒரு கேள்வி எழும் போது என்னை யோசிக்க வைத்தது. மேலும் இந்தப் புவியில் பசியால் பல கோடி மக்கள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில். அடுத்தக் கிரகத்தில் என்ன இருக்கிறது என்று அறிய முற்படுவது அவசியமான ஒன்றா? என்ற கேள்வி எழுந்தது. நீங்களே சிந்தித்துப் பாருங்கள். என் இந்தத் தேடல் மேலும் பல அதிர்ச்சியான தகவல்களுக்குள் என்னை இழுத்துச் சென்றது. அவற்றை என் பின் வரும் கட்டுரைகளில் விவரிக்கிறேன்.

நம் இளைஞர்கள் மத்தியில் நான் கண்ட மேலும் ஒரு பொல்லாத ஆளுகை போதைப் பழக்கம். என் கல்லூரியில் சென்ற வாரத்தில் ஒரு மாணவன் இந்த போதைப் பழக்கத்தால் இறந்து போனான். மிகவும் வேதனையான உண்மை. போதையில் இருக்கும் போது வாகனம் ஓட்டிக் கட்டுப் பாட்டை இழந்து இறுதியில் உயிரைப் பறிக்கும் ஒரு விபத்தாகப் போய் முடிந்திருந்தது. இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்து இருக்கிறது. இன்றைய மாணவர்கள் தன் போதைப் பழக்கத்தை மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். இதில் பெருமைப் பட என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. போதைப் பழக்கம் ஏதோ ஒரு வகையில் உயிரைப் பறிக்கும் வல்லமை வாய்ந்தது. இவை கடவுளுக்கும் எதிரான ஒரு செயல் ஆகும். இவற்றை மாற்று மார்க்கங்களைப் பின்பற்றும் மற்றும் நாத்திகம் பேசித் திரியும் இளைஞர்களுக்கு நாம் எவ்வாறு புரிய வைப்பது என்றுப் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒரே வழி அவர்களுக்காக ஜெபிப்பது மட்டும் தான். என்னுடைய வேண்டுகோள் ஒன்று உண்டு. நீங்களும் இந்த இளைஞர்களுக்காக ஜெபிப்பீர்களா?

                                    வாழ்க இயேசு நாமம்!!

Tuesday, November 13, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part IV


எனக்குள் எழுந்த கேள்விக்கு பதில் காண முயன்றேன். அநேக சாட்சிகளை கவனித்தேன். அவர்கள் கூறுவது பொய்யாக இருக்குமோ? என்று அவற்றை ஆராய முயன்றேன். இந்த சமயத்தில் தான் நான் மிகவும் மதித்த அறிவியலின் கோணத்தில் என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. என் நண்பனுடனான ஒரு விவாதத்தின் போது என்னிடம் அவன் எழுப்பிய ஒரு கேள்வி ,”கடல் அலைகள் எப்படி உருவாகின்றன?” என்று வினவினான். நான் அதற்கு அவனிடம் வழக்கமான பதிலான “நிலவின் ஈர்ப்பு விசை தான் காரணம் என்று பதில் அளித்தேன். “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான். “அறிவியல் அதைத் தானே கூறுகிறது” என்று பதில் அளித்தேன். அவன் நக்கலாக, “அறிவியல் என்ன கூறினாலும் நம்புவியா?” என்று வினவினான். அவன் நக்கலாகக் கூறி விட்டு சென்று விட்டான் ஆனால் என்னை அந்தக் கேள்வி மிகவும் பாதித்தது. அப்பொழுதிருந்து கடல் அலைகளுக்கான காரணத்தை அறிய சிறு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பல புத்தகங்கள் படித்தேன். அனைத்துமே வெறும் theory எனப்படும் கோட்பாடாகவே இருந்தது.

நிலவின் ஈர்ப்பு விசையினை விட, புவியின் ஈர்ப்பு விசை பத்து மடங்கு அதிகம். இந்த நிலையில் எப்படி புவியில் இருக்கும் ஒரு பொருளை அதை விட பத்து மடங்கு குறைவான ஈர்ப்பு விசையுள்ள நிலவால் இழுக்க முடியும்? என்ற கேள்வி பிறந்தது. இந்த ஆராய்ச்சி என்னை மேலும் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகளுக்குள் இழுத்து சென்றது. “நிலவு இருக்கட்டும், அது எப்படி சூரியனின் ஈர்ப்பு விசையை கண்டறிந்தார்கள்?”  நான் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு அன்று புரிந்த்தது. ஏமாந்துப் போனது போல் ஒரு உணர்வு, நான் இவ்வளவு நாள் கற்றுக் கொண்ட அறிவியலில் இவ்வளவு தர்க்கங்கள். இவற்றைப் பற்றி நான் ஒரு முறை கூட சிந்தித்தது கிடையாதே! இன்னும் தோண்ட ஆரம்பித்தேன். எனக்கு ஏமாற்றங்கள் மட்டுமே பதிலாக கிடைத்துக் கொண்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக என்னுடைய அடுத்தடுத்தக் கட்டுரைகளில் விவரிக்கிறேன்.

ஒரு தெரிந்த நண்பருடைய நண்பர் மிகவும் பக்தி வைராக்கியமான குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய முக நூல் பக்கத்தை ஒரு முறை ஆராய்ந்தப் பொழுது நான் பார்த்த ஒரு விஷயம் என்னை மிகவும் அதிர வைத்தது. அதில் கேட்டிருந்த கேள்வி “இயேசுவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்பதற்கு அவர்கள் “இது ஒரு பெரிய நகைச்சுவை அப்படி ஒருவர் இருந்தாரா என்ன?” என்று பொருள்படும் ஆங்கில வாக்கியத்தில் பதிலை தட்டச்சு செய்து வைத்திருந்தார். ஆம், இன்று இளைஞர்கள் இவ்வாறு தான் இருக்கிறார்கள். விவாதித்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்ட மனிதன் இன்று அலைப் பேசி என்னும் சிறு உலகத்தில் சிக்கிக் கொண்டுள்ளான். அவன் நிலையோ கடவுளையே யாரென்று கேட்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இதற்கு நாம் எவ்வாறு தீர்வு காண போகிறோம் என்று தெரியவில்லை. எனக்கு இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறிய ஒரு வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. ஆம், “நான் ஒரு விஷயத்திற்காக மட்டுமே பயப்படுகிறேன், ஒரு நாள் இந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியானது, நம்மிடையே இருக்கும் விவாதங்களைக் குறைக்கும். அப்போது வருங்கால தலைமுறையே முட்டாள் ஆகி விடும்” என்று 19 – ம் நூற்றாண்டிலேயே கூறி இருந்தார். அது இன்று அரங்கேறி வருவது மிகவும் வேதனையான விஷயம். இந்த நிலை மாறுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க இயேசு நாமம்.

Monday, November 5, 2018

Atheism/ Is it an Objective of Devil?? - Part III

நாத்திகம் பற்றிய என்னுடையத் தேடலின் போது தான் அந்தக் கனவு எனக்கு வந்தது. இது வரை என் வாழ்வில் நான் கண்ட கனவுகளில் எதுவுமே இவ்வளவுத் தெளிவாக இருந்ததில்லை. ஆம், கனவு இரண்டு நிமிட நீளம் கூட இருக்கவில்லை. ஆனால், அது என் வாழ்வின் முக்கியமான மாறுதலாக அமைந்தது. நான் நடப்பதற்குக் கூட இடையூறான முட்கள் நிறைந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தம் “அங்கு செல்லாதே, அது முடிவில்லாதப் பாதை திரும்பி வா” என்று கூறியது. “நான் எப்படிச் சென்றால், உங்களுக்கு என்ன?” என்று திமிருடன் வினவினேன். “உன் மேல் எப்பொழுதும் கரிசனையுடையவன் நான், நான் சொல்வதைக் கேள் திரும்பி வா” என்று பதில் கூறியது அக்குரல். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, “உன் கேள்விகளுக்கு நான் தெளிவான பதில்கள் தருகிறேன், தயவு செய்து திரும்பி வந்து விடு” என்று கெஞ்சலுடம் கூடிய குரலில் கூறியது. நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.  இரவு ஒரு மணிக்கு மேலாயிருந்தது. இப்படி ஒரு கனவை நான் எதிர் பார்த்தது இல்லை.

வழக்கமான கனவுகள் என் அன்றாட வாழ்வு சம்பந்தப் பட்ட இடங்களை அடிப்படையாகக் கொண்டு தான் அமையும். இது அவ்வாறு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. நான் குழப்பத்துடன் எழுந்து விடுதியின் வெளியில் வந்து உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது என் மனதில் திடீரென ஒரு கேள்வி எழுந்தது. “இயேசுவுக்காக அநேக மனிதர்கள் உயிரினை இழந்துள்ளனர். மனிதன் தன் பெற்றோருக்காக, நண்பர்களுக்காக, மனைவிக்காக அல்லது குழந்தைகளுக்காகக் கூட உயிரைக் கொடுக்க விழைவதில்லை. ஆனால் தாங்கள் கண்டும் கூட இராத இந்த இயேசுவுக்காக எப்படிக் கொடுத்தனர்?” என்று. எனக்குள் எழுந்த அந்தக் கேள்வி என் வாழ்வை மாற்றப் போகிறது என்பதை நான் அன்று அறியவில்லை. அது எப்படி நிகழ்ந்தது என்று என்னுடைய அடுத்தக் கட்டுரையில் விவரிக்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் நான் கண்ட மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு கடவுளின் அன்பு புரியவில்லை என்பது தான். ஒருவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்துக் கொண்டால் மட்டுமே அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நமது நன்மைக்கென்பது நமக்குப் புரியும். அவர்கள் சத்தியத்தை அறிய முயல்வதில்லை. அது அவர்கள் தவறு அல்ல, சந்தேகத்தின் ஆவி நம்மை ஆட்டி வைத்துள்ளது என்பது தான் உண்மை. நான் இடைவிடாது ஜெபிப்பது ஒரு விஷயத்தை நோக்கி தான், “தேவனே என்னில் இருக்கும் பெருமையை சிதைத்து உம் அன்பை உணரும் படிக்கு என் இதயத்தைத் திறந்தருளும்” என்பதே. ஆம், கடவுள் நம்மிடம் பல விதங்களில் பேசுகிறார். உதாரணமாக சில பாவங்கள் நாம் செய்து முடித்தப் பின்பு, நம் மனது, ஏன் அவ்வாறு செய்தோம்? என்று நம்மை மிகவும் வருந்த வைக்கும். அது கூட கடவுள் நம்மிடம் பேசுவது தான். இல்லை என்றால் வருத்தப் பட வேண்டிய அவசியம் இருக்காதே!! நம்மால் சந்தேகத்தின் ஆவியை வெற்றிக் கொள்ள முடியுமா? அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். நன்றி வணக்கம்
வாழ்க இயேசு நாமம்!!

Atheism/ Is it an Objective of Devil?? Part XIV

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!                   அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்...