கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!
அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துவதில்
பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நாத்திகத்தின் வகைகளை
ஒவ்வொன்றாக நான் தேடிக்கொண்டிருக்க, அதை நம் அன்றாட நிகழ்வுகளில் காண்பது சற்று மனதை
பதைபதைக்க வைப்பதாக இருக்கிறது. உதாரணமாக, நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்
என்பதற்கு அடையாளமே அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தான் என்றால் அது மிகையாகாது.
நம்பிக்கை என்றவுடன் என் நினைவிற்கு வருவது, நாம் நிஜமாகவே அவரை விசுவாசிக்கிறோமா?
அல்லது நம்புகிறோமா? என்ற கேள்விதான். ஆம், மனித வாழ்ககையானது பல்வேறு சுகம் மற்றும்
துக்கங்களுடன் பிணைக்கப்பட்டது என்பதில் நமக்கு எவ்வித ஐயமும் இருக்க போவதில்லை. இதற்கு
காரணமாக, ஆதாம் செய்த பாவத்தைதான் மேற்கோள் காட்டியாக வேண்டியுள்ளது. ஆம், ஆதியாகமம்
மூன்றாம் அதிகாரத்தின் 17 - ம் வசனம் பின்வருமாறு கூறுகிறது "….புசிக்கவேண்டாம்
என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம்
சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்". வருத்தத்தோடே! என்று கடவுள் கூறிய இந்த வார்த்தை மிகவும்
ஆழமானது. கர்த்தர் இந்த வார்த்தையை கூறியதால் அவர் மனிதனை வெறுத்து விடவில்லை என்பது
நாம் அறிந்த உண்மையே!. எப்படிப்பார்த்தாலும் அவர் கொடுத்த இந்த தண்டனை தான் பூமியில்
நாம் படும் இத்தனை பாடுகளுக்கும் காரணம் என்பது மிகையாகாது. நாம் வேதாகமத்தில் காணும்
மனிதர்களும் சரி, இன்றைய அல்லது பல்வேறு காலகட்ட்ங்களில் பல விஷயங்களை சாதித்த மனிதர்களும்
சரி, அனைவரும் பல விதமான பாடுகளையும் கஷ்டங்களையும் அனுபவித்தவர்களாத்தான் இருந்திருக்கிறார்கள்.
இன்னும் ஆழமாக பார்த்தால் எனக்கு பிரசங்கியின் வாக்கியங்கள் இதற்கு மிகவும் பொருத்தமாக
இருக்கும் என்று தோன்றுகிறது. அவர் "ஓருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்;
ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்"
என்று குறிப்பிடுகிறார். ஆம், மனித வாழ்வு அர்த்தமற்று போகும் நிலை இங்கு தான் வருகிறது.
தான் சம்பாதித்ததை தான் அனுபவிக்க முடியாமல், பின் வரும் சந்ததிக்கு விட்டு செல்லும்
நிலை ஏற்படும் போது. இதை பெரிய தீங்கென்று
பிரசங்கி குறிப்பிடுவதை நாம் காணமுடிகிறது. இத்தகைய சூழ்நிலையில் மனித வாழ்வு அர்த்தமற்று
இருப்பது போல் நமக்குத் தோன்றி விடுகிறது. எனவே, தான் துன்பங்கள் வரும் போது நாம் கடவுளை
மறந்து விடுகிறோம். ஆனால், துன்பங்கள் வரும் போது அவற்றை நாம் பெரிது படுத்தி வருந்துவதை
நம் தேவன் விரும்புவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. எடுத்துக்காதடாக, துன்பங்கள் சிலருக்கு தகாத சிநேகத்தினால்
வரலாம், சிலருக்கு தகாத பழக்கவழக்கங்களால் ஏற்படலாம், மற்றும் சிலருக்கு பிள்ளைகளின்
ஒழுங்கின்மையால் ஏற்படலாம். எது எப்படியோ?, துன்பங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை
என்பது மட்டும் உண்மை.
சரி, இந்த துன்பங்கள் யாரால் ஏற்படுத்தப் படுகின்றன? இதற்கு
ஒரு சிறந்த உதாரணமாக யோபுவின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம். யோபுவைச் சோதிக்கக்
கடவுள் சாதத்தானுக்கு அதிகாரம் வழங்கியதை நாம் அங்கு காண முடிகிறது. ஆனால், முதலாம்
அதிகாரம் கடைசி வசனத்தில், அனைத்தையும் இழந்த யோபு பாவம் ஏதும் செய்யயவில்லை என்று
குறிப்பிடப்படுவதை நாம் காண முடிகிறது. பிசாசானவன் நம்மை சோதிக்க கடவுளிடம் அனுமதி
பெறுகிறான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்த சோதனையை நாம் தாங்கி கடவுளில் தரித்திருந்து
வெற்றி காண்பதை அவர் விரும்புவதாக நான் உணர்கிறேன். யோபுவின் விஷயத்தில் இன்னும் ஆழமாக
பார்க்க போனால், இதே யோபு பின்னர் தன் நண்பர்களுடன் உரையாடுகையில் மிகவும் புலம்புவதை
நம்மால் காண முடிகிறது. உதாரணமாக 6-ம் அதிகாரம் 30-ம் வசனத்தை எடுத்து கொண்டால்,
"என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?" என்று
அவர் கூறுகிறார். இது சற்று அகங்காரமான தோரணையுள்ள பேச்சாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
மேலும், யோபுவின் நண்பர் எலிகூ பேசுகையில் "ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்;
தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான்."
(யோபு 37:24). இந்த மதிக்கமாடடார் என்ற வார்த்தை கர்த்தரை சற்று கோபமூட்டியிருக்க
வேண்டும். அவர் உடனடியாக யோபுவிடம் பேசுகிறார் (யோபு 38:2) "அறிவில்லாத வார்த்தைகளினால்
ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?" என்று கர்த்தர் யோபுவிடம் வினவுகிறார்.
இந்த சம்பவம், யோபு கர்த்தர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை என்றாலும்,
அவரின் மனதில் இருந்த சில தகாத எண்ணங்களை எடுத்துக் மேற்கோள் காட்டுகிறது. அதாவது கடவுள்
"சர்வ வல்லவர்" (என்ற நினைவுடன்) என்பதால் எதை வேண்டுமானாலும் செய்வார் என்று
அவரும் அவர் நண்பர்களும் நினைத்துக் கொண்டிருந்ததை அந்த சம்பவங்கள் மூலமாக வெளிக்கொணர்ந்திருந்தார்
கடவுள்.
ஆனால், கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்லவே! நாமும் இப்படித்தான் சோதனைகள் வரும் போது கடவுள்
மீதிருக்கும் நம்பிக்கையை இழந்து நிற்கிறோம் பல நேரங்களில். அவருடைய நீதி நம்முடைய
நீதியை விட பெரிது என்பதையும் மறந்து விடுகிறோம். இது போன்ற நிகழ்வுகள் நாம் கர்த்தர்
மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவமாக்குகிறது. இன்னும் தெளிவாகச் செல்ல போனால், சஞ்சலங்கள்
வரும் போது அவற்றை நம் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவிடம் முறையிடுவதை விட நமது நண்பர்களிடம்
முறையிடுவதையே நாம் அதிகம் விரும்புகிறோம். அவர்களால் நம் சஞ்சலங்களை தீர்த்து விட
முடியுமா? கடவுள் கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால் அவர் நம் அருகில் இல்லை என்று
நாம் சொல்லலாகுமா? அவரது வல்லமை விளங்கும் இடத்தில், அவர் ஜெயமும் கண்டிப்பாக விளங்கும்
என்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒரு விஷயம் தானே? இதையே நம் அருள்நாதர் இயேசு கிறிஸ்து
மிகத் தெளிவாக பின் வருமாறு எடுத்துக் கூறுகிறார்.
"ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்
என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்"
என்றும் "கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?"
என்றும் கூறுகிறார். மேலும், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும்
தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" என்று கூறியதன்
மூலம் கடவுளை முன்னிறுத்தி, அவருக்கு முதலிடம் அளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு
உணர்த்துகிறார். கடவுளை நம்பாத பட்ச்சத்தில் நாம் பிரச்சனைகள் வரும் போது வருந்தி விடுகிறோம்.
ஆனால் நாம் வருந்துவதை தேவன் துளியளவும் விரும்பவில்லை. அவர் மீது நாம் வைத்திருக்கும்
நம்பிக்கையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக நமக்கு வரும் பிரச்சனைகளை எடுத்துக் கொள்வதைதான்
அவர் விரும்புவதாக நான் உணர்கிறேன். என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல் வரி ஒன்று உண்டு.
நாம் சபைகளில் ஆராதனைகளின் போது பாடும் "தேவனே நான் உமதண்டையில்" பாடலில்
வரும் ஒரு வரி அது. "இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர் கல் நாட்டுவேனே, எந்தன்
துன்பத்தில் வழியாய் இன்னும் உம்மை கிட்டிச் சேர்வேன்" என்ற வரிதான் அது. துயரப்
படுகிறவர்களை இயேசு கிறிஸ்து பாக்கியவான்கள் என்று குறிப்பிடுகிறார். ஆம், துயரங்கள்
கடவுளிடம் நம்மை இன்னும் நெருக்கமாய் கொண்டு சேர்க்கும் என்பதை நாம் மனப்பூர்வமாய் விசுவாசிப்போம்.
நாத்திகத்தின் இந்த வகையை நாம் வெறுத்து ஒழித்தாலொழிய நாத்திகம்
நம்மை விட்டு அகலப் போவதில்லை. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் கடவுளின் பெயரை அடிக்கடி
உச்சரிக்கும் நாம் அவர் மீதிருக்கும் நம்பிக்கையை நாம் துயரங்களை எதிர்கொள்ளும் விதங்களில்
காட்டினால் அவர் மிகவும் மகிழ்வார்.
அடுத்ததக் கட்டுரையில்
சந்திப்போம்!!!
வாழ்க இயேசு நாமம்!!!