Monday, December 17, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VIII


நாம் கடவுளை நிஜமாகவே பின்பற்றுகிறோமா??
வணக்கம்,
சென்ற கட்டுரையில் கூறியிருந்தது போல, நாத்திகம் காணப்படும் இடங்களை தொடர்ச்சியாக விவரிக்க முற்படுகிறேன். நாத்திகத்தை மற்றுமொரு வழியாகவும் நான் காண்கிறேன், அதுதான் சுயநலம். இதை நான் நிறைய கிறிஸ்தவர்களிடம் (என்னையும் சேர்த்து) கண்டிருக்கிறேன். சுயநலம் என்பது கண்டிப்பாக நமக்கு பரத்திலிருந்து கிடைக்கும் நன்மை கிடையாது. அது பேய்த் தனமான, சாத்தானிடமிருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு சாபமாகவே இருக்கிறது. சுய நலத்தை நாம் நம் மனதில் அணிந்து கொண்டிருந்தால் அது நாம் கடவுளுக்கு எதிரான ஒரு சக்தியை நேரடியாக வணங்குவதற்குச் சமமாகும். 

நாத்திகவாதிகளிலே ஒரு பிரிவு உண்டு, அதாவது “morality” என்று ஆங்கிலத்தில் பொருள்படும் நன்னெறிகளை கடைப் பிடிப்பவர்கள். ஆனால் நான் எந்த ஒரு நாத்திகவாதியையும் கிறிஸ்தவ மிஷனெரிகளுக்கு இணையான ஒரு சவாலான ஊழிய தளங்களில் கண்டதில்லை. கடவுளுக்காக எதையும் செய்ய துணிந்த மிஷனெரிகள் இயேசு கிறிஸ்து நமக்குக் கற்று கொடுத்த அனைவரையும் அன்பு கூர்ந்து, அனைவரையும் சமமாகக் கருதி, அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு அவர்கள் மற்ற கிறிஸ்தவர்களின் உதவியுடன் பல்வேறு நற்செயல்களை செய்து வருகின்றனர். ஒரு கூறல் உண்டு, “நாத்திகவாதி நன்னெறிகளைக் கடைபிடிப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை” என்று. ஆம், அவர்கள் நாத்திகம் பேச காரணமே அவர்கள் நன்னெறிகள் என்று இயேசு கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்ட பல செயல்களை கடைபிடிக்க விரும்பாதது தான். இதை நான் முந்தையக் கட்டுரைகளிலேயே விவரித்துக் கூறியிருக்கிறேன். இன்றையக் கிறிஸ்தவர்களில் இந்த நன்னெறிகளைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவே. பாவத்திலிருந்து நம்மை மீட்க நமக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட இயேசு கிறிஸ்துவுக்காக நாம் செலுத்தப் போகும் நன்றி இந்த நாத்திகப் பாதை தானா?

இன்னும் தெளிவாய் சொல்லப் போனால் சுயநலம் நம்மில் இருக்குமானால் நாம் கடவுளை வணங்கியும் பலனில்லை. நாம் பிறர் நமக்குச் செய்யும் தவறுகளை மன்னிக்கவில்லை என்றால் கூட அது சுயநலக் கணக்கில் தான் சேருகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. இந்த நிலையில் நம்மை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.  ஆம், நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த சமயத்தில் இயேசு கிறிஸ்துவை தொழாமலிருப்பது தான் நாத்திகத்தில் சேரும் என்று நினைத்தேன். ஆனால், நாளடைவில் இயேசு கிறிஸ்துவை தொழுது வரும் நாமே ஒரு வகையில் நாத்திக வாதிகளாகத்தான் செயல்பட்டு வருகிறோம் என்பது எனக்குப் புரிந்தது. கிறிஸ்துவுக்குள்ளான நமது நம்பிக்கையை அவரது வார்த்தைகளை பின்பற்றுவதன் மூலம் தான் நாம் காண்பிக்க முடியும் என்பது எனக்கு புரிந்தது. அவரது வார்த்தைகளை நாம் பின்பற்றுகிறோமா? எனக்கு இந்த நேரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் பிறரிடம் அன்பு செலுத்துவது பற்றி கூறிய வார்த்தைகளான “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” என்ற வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன. நாம் மாற வேண்டிய நேரம் இதுதான். நம்மை முழுதும் கடவுளிடம் ஒப்படைத்து அவரது அன்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாய் நடப்போமா??
மீண்டும் சந்திப்போம்!!!.
வாழ்க இயேசு நாமம்..

Friday, December 7, 2018

Atheism/ Is it an Objective of Devil?? Part VII


கடவுளை நாம் நேசிக்கிறோமா?
நாத்திகம் என்பது சாத்தானின் ஒரு வேலையாக இருக்குமோ? என்ற கண்ணோட்டத்தோடு தான் நான் இந்த வலைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் கடந்த சில நாட்களில் நான் கற்ற மற்றும் பெற்ற சில அனுபவங்களை வைத்து பார்க்கும் போது எந்தவித சந்தேகமும் இல்லாமல் அது சாத்தானின் வேலை தான் என்பது நிரூபணமாகிறது. ஆம், நான் கடந்த வாரத்தில் தான் “கெவின் ஹாவிந்த்” எனப்படும் ஒரு அமெரிக்க முனைவர் பட்டம் பெற்ற, கடவுள் தான் உலகைப் படைத்தார், என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கத் துடித்த ஒரு மனிதரைப் பற்றி இணையதளம் வாயிலாக அறிந்தேன். அவர் நாத்திகவாதிகளான இரண்டு பேராசிரியர்களுடன் நடத்திய விவாதம் மிகவும் பிரபலம் வாய்ந்ததாகவும், ஆழமான கருத்துடையதாகவும் கருதப்படுகின்றது. அவர்கள் இருவரும், நீங்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்று கூறுகிறீர்கள், ஆனால் அந்த கடவுளை யார் படைத்தார் என்பதைக் கூறவில்லையே என்ற கேள்வியை எழுப்பிய போது அவர் அதற்கு அறிவியல் அடிப்படையிலேயே, அதுவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்னும் இயற்பியலாளரின் கோட்பாட்டோடு தொடர்புப் படுத்தி பதில் அளித்திருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஒவவொரு காணொளிகளாக உலாவிப் பார்க்கத் தொடங்கினேன். அவரின் காணொளிகள் அனைத்துமே அறிவியலுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வந்தன. 2005 வரையிலான காணொளிகளை மட்டுமே என்னால் காண முடிந்தது. அதன் பிறகு ஒரு மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டிலிருந்து இருந்த காணொளிகளை காண முடிந்தது. இடைப் பட்ட நாட்களில் அவர் ஒன்றுமே செய்யவில்லையா என்று ஆராய்ந்தப் பொழுது தான், அவர் செய்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த அமெரிக்க அரசாங்கம் மற்றும் பல அறிவியலை சார்ந்து வாழ்ந்து வந்த நிறுவனங்கள் அனைத்துமே அவர் மீது பொய்யான வழக்குளைப் போட்டு அவரை சிறைச் சாலையிலேத் தள்ளியிருந்ததுத் தெரிய வந்தது. அவரைச் சிறைப் பிடிக்கச் சென்ற போது போலீசார் மிகவும் மோசமாக அவரிடமும் அவர் மனைவியிடமும் நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் மனைவி விவாகரத்து வாங்கி அவரைப் பிரிந்துச் சென்றிருக்கிறார். அவரது சொத்துக்கள் அனைத்துமே முடக்கப்பட்டிருந்தன. 10 வருட சிறை வாசத்திற்குப் பிறகு அவர் 2015 ஆம் ஆண்டு இறுதியில் தான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். மீண்டும் அவர் தன் ஊழியத்தை செய்து வருகிறார். இவ்வளவு அடிகள் வாங்கியும் அவர் சளைக்கவில்லை. மீண்டும் தேவப் பணியைத் தொடர்கிறார்.
Dr. Kevin Hovind
அவர் மீது வீண் பழி சுமத்திய நாத்திக வாதிகளின் அச்செயல் சாத்தானின் செயலாகத்தான் இருக்க வேண்டும். நிரந்தரமாக அவரை அழிக்க நினைத்த சாத்தானின் சூழ்ச்சியை கடவுள் முறியடித்து அவர் பணியை மீண்டும் தொடர உதவி செய்தார்.  

நாத்திகத்தை நான் கிறிஸ்தவர்களின் இன்னொரு செயல் வழியாகவும் காண்கிறேன். இன்று என் அலுவலகத்தில் என்னுடம் பணிபுரியும் ஒரு கிறிஸ்தவ நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது தான் எனக்குத் தெரிந்தது நாத்திகம் இன்னொரு வாயிலாகவும் இந்த சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கின்றது என்பது. ஆம், அவர்கள் அறியாமையால் மக்கள் பாகால் மற்றும் மாற்று தெய்வங்களை வணங்குவதைப் பொருட்படுத்த விரும்பவில்லை. அப்படி வணங்குவது அவரவர் விருப்பம் எனவும், அவர்களைத் திருத்துவதால் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது எனவும் வினவினார். இந்தக் கேள்வியை ஒரு நாத்திக வாதியின் கேள்வியாகவே நான் பாவிக்கிறேன். நம்மை நேசித்து நமக்காக உயிரைக் கொடுத்த இயேசு நாதர் இவ்வாறு நினைத்திருந்தால் நம் நிலைமை என்னவாக இருந்திருக்குமோ? அது மட்டுமில்லாமல் நம்மைப் போல் பிறனையும் நேசிக்க அவர் கூறியதன் பொருள், சுவிஷேத்தை அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் பிரசிங்கப்பது மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும்.

நான் சிறிதும் எதிர் பாராதது கிறிஸ்தவர்களின் இந்த மனநிலை தான். நடைமுறையில் இவற்றைக் கொண்டு வருவது சற்றுக் கடினம் தான். ஆனால் முடியாத காரியம் அல்ல. நம்மை அளவு கடந்து நேசிக்கும் நம்முடைய தெய்வம் இயேசு கிறிஸ்துவை நாமும் நேசிக்கிறோம் என்றால் இது சாத்தியமே!. நான் முதலில் இந்த வலைப்பதிவை எழுதுவது உபயோகமாக இருக்குமா என்ற ஒரு ஐய்யத்துடன் தான் ஆரம்பித்தேன். ஆனால், இன்றோ பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல என்னால் முடிந்த வரை என் வாசகர்களுக்கும் கடவுளின் அன்பைப் பற்றி கூறக் கடவுள் தந்த கிருபையை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன். மீண்டும் தொடர்வேன்.
                                    வாழ்க இயேசு நாமம்!!      

Atheism/ Is it an Objective of Devil?? Part XIV

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!!                   அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துவதில் பெரும் மகிழ்...