கிறிஸ்துவுக்குள்
மிகவும் பிரியமானவர்களே,
சென்ற கட்டுரையில் நாத்திகத்தின் ஒரு
வகையான புறக்கணித்தலினைப் பற்றி எழுதியிருந்தேன். எத்தனை பேர் மனதில் அது தாக்கத்தை
ஏற்படுத்தியது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நாம் அவற்றை உண்மை என்று ஒப்புக்
கொண்டுதான் ஆக வேண்டும். புறக்கணித்தல் என்னும் இந்த வார்த்தையினைக் கடவுள் விரும்புகிறாரா?
ஆம், அவர் ஒரு சில இடங்களில் புறக்கணித்தல் என்பதை விரும்புகிறார். இதற்கு மிகச் சிறந்த
உதாரணமாக் சங்கீதம் முதல் அதிகாரம் முதல் வசனத்தைக் குறிப்பிடலாம். சங்கீதக்காரன் மூன்று
விஷயங்களை புறக்கணிக்குமாறு கூறுகிறான். ஆம், துன்மார்க்கரின் ஆலோசனை, பாவிகளுடைய வழி
மற்றும் பரியாசக்காரன் உட்காரும் இடத்தில் உட்காராமல் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இந்தப் பரியாசக்காரக்காரர் என்னும் வார்த்தை ஆங்கிலத்தில் “scoffers” என்று கூறப்பட்டுள்ளது
(KJV and ESV). அந்த வார்த்தைக்கு நிந்தனைக்காரர் என்றும் இன்னொரு பொருளுண்டு.
A quote on ignorance of God's word |
ஆம்,
கடவுள் மேற்கூறிய மார்க்கங்களில் எதிலும் நம் நிழல் செல்வதைக் கூட விரும்பவில்லை. இவை
போலத் தீய வழிகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அடுத்து
இரண்டாவது வசனத்தில் சங்கீதக்காரன் எழுதுகிறான், “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து”
என்று, ஆம் இந்த புறக்கணிப்பைப் பற்றிதான் நான் சென்ற கட்டுரையில் கூறியிந்தேன். அவருடைய
வேதத்தில் நாம் பிரியமாயிருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் எந்த உபயோகமும் இல்லை.
அது உலகப் பிரகாரமான ஒரு வார்த்தையாகவே இருக்கும். பிரியமாயிருக்கிறோம் என்பதை எந்த
விதத்தில் நாம் வெளிப்படுத்தப் போகிறோம்? அதற்கான பதிலையும் அடுத்த வார்த்தையிலேயே
சொல்கிறார். “இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று.
எப்போதும் அவர் வேதத்தினைப் பற்றி உரையாடிக் கொண்டும் தியானித்துக் கொண்டும் இருக்க
வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார். முக்கியமாக வாலிபப் பிராயத்திலே இருக்கும்
நம்மிடம் அவர் இவற்றை அதிகமாக எதிர்பார்க்கிறார். பிரசங்கி 12:1-ல் “நீ உன் வாலிபப்
பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று சாலமன் குறிப்பிடுகிறார். நினைப்பது என்பது
அவருடைய வேதத்தினை தியானிப்பது அதிலே பிரியமாயிருப்பது என்று அனைத்து அர்த்தங்களையும்
உள்ளடக்கியதே. நாத்திகத்தின் ஒரு பிரிவான இந்த புறக்கணித்தலினால் நம் கிறிஸ்தவ இளைய
சமுதாயம் மிகவும் துன்புறுவதை என்னால் காணமுடிகிறது. அவர்கள் மார்க்கம் தப்பி நடப்பதற்கு
இந்த புறக்கணித்தல் என்னும் நாத்திகத்தின் ஒரு வகை மிகப் பெரியக் காரணமாக அமைகிறது.
நாம் வீட்டிலாது கர்த்தருடைய வேதத்தினை அனுதினமும்
தியானித்து அவற்றின் வெளிப்பாடுகளை பிள்ளைகளுடனும் நம் சுற்றத்தாருடனும் பகிர்ந்து
கொண்டால் அந்த வார்த்தைகள் அவர்களை இத்தீமையான வழிகளிலிருந்து மீட்டெடுக்கும் என்பதில்
எந்த ஐயமும் இல்லை. நமக்குள் விவாதங்கள் இன்னும் வலுப் பெற வேண்டும்.
St. Jerome's quote on Ignorance of God's word |
நான் இந்தக் கட்டுரையை
எழுதிக் கொண்டிருக்கும் போது எனக்குள் தோன்றிய இன்னுமொரு கருத்து, “நாம் கர்த்தருடைய
வார்த்தைகளை தியானித்து அறியாவிட்டால், வரும் பிரச்சனை மிகவும் கொடியதாக இருக்கும்”.
இதற்கு உதாரணமாக நமக்கு வேதத்தில் தெரியாத ஒரு பகுதியை ஒருவர் நம்மிடம் விவரிக்கும்
போது நாம் அவர் கூறுவதை அப்படியே நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். இந்த
மாதிரியான சூழல்கள் நம்மை தவறான புரிந்துணரல்களுக்கு ஆள்படுத்தும். நாம் இவ்வாறு வேதத்தினைத்
தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதே சாத்தானின் நோக்கமாக இருக்கிறது. இதுவரை
வாழ்ந்த தலை முறைகளில் வேதாகமத்தை அதிகமாக அதுவும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல்
உபயோகிக்கும் வாய்ப்பு நம் தலைமுறையினருக்குதான் கிடைத்திருக்கிறது. ஆம், கைப்பேசிகள்,
கணினிகள், இணையம் மற்றும் கைப்பிரதிகள் என அனைத்து விதங்களிலும் வேதாகமத்தை கற்பதற்கான
வாய்ப்புகள் நமக்கு ஏராளம். ஆனால், நாம் அவற்றை எவ்வளவு உபயோகிக்கிறோம்? சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது.
“தினமும் திருமறை அருந்து, அதுவே உன் நோய்
தீர்க்கும் மருந்து”
அடுத்தக் கட்டுரையில் சந்திப்போம். வாழ்க
இயேசு நாமம்.